Monday 26 May 2014

சாம்பார் வைப்பது எப்படி?!?!



சாம்பார் வைப்பது எப்படி?!?!


துவரையா?... கடலையா?…
இந்தப் பருப்பில்தான் எத்தனை வகை?
அவரையா?... முருங்கையா?...
எந்த சேர்ப்பில்தான் கூடுதல் சுவை?

அரை விடுமுறை நாளன்று,
ஆனைவயிறின் அசுரப்பசியில்,
அதிகப்பிரசங்கி நண்பன் கொடுத்த,
அநியாய யோசனைதான். 
சொந்த சமையல் சாம்பார்.

தட்டு கழுவக்கூட - சமையல் 
கட்டு பக்கம் சென்றதில்லை.
வெந்நீர் வைத்துக்கூட - எங்கள்
அடுப்பிற்கு அனுபவமில்லை.

இருந்தாலும் துணிந்து விட்டோம்,
இயலுமென்று இஞ்சியோடு.
போர்க்கோலம் பூண்டு விட்டோம்,
கரண்டி கடாய் கத்திரிக்காயோடு. 

எடுத்தவுடனே சந்தேகம்
எண்ணெய் எவ்வளவென்று?
என் நண்பனுக்கோ பெருங்குழப்பம்,
எந்த எண்ணெய் என்று?

இறைவன் விட்ட வழியென்றேன்-நல்ல வேளை
இருந்தது ஒன்றுதான் வேறில்லை.
எடுத்து ஊற்றி காய்ந்தவுடன்- இட்டேன்
கடுகு உளுந்து வேப்பிலை.

இட்ட கடுகும் வெடித்து தெறித்தது,
எம் வீரத்தமிழ்ப் பெண்ணைப்போல.
தெறித்த சூட்டில் பயந்து போனேன்,
எம் பெண்ணைத் தொட்ட கயவன்போல.

இடையில் வந்தது முனகல் சத்தம் - என்
இனிய நண்பன் அழுகும் சத்தம்.
வெட்டுகிறேன் வெங்காயம் பேர்வழியென்று,
கொட்டுகிறான் கண்ணீரை உப்புக்கென்று.

அழுத்தமானியும் அடித்து அழைத்தது,
கொடுத்த துவரையும் கொஞ்சமே வெந்தது.
திருகி நெருப்பை கூட்டி வைத்து,
திரும்பையில் தோன்றியது, புளியை மறந்தது. 

எலந்தையளவா? எலுமிச்சை அளவா?
எண்ணி மூளை குழம்பினேன்.
எருமை அளவை எடுத்துருட்டி,
நண்பன் கரைக்க, திடுக்கிட்டேன்.

வெள்ளையன் வெங்காயம் பொன்னனாக,
சிவந்த தக்காளி நாணிக் கரைய,
பச்சை மிளகாயை மேலாய்த் தூவி,
பார்த்துரசித்தேன் தேசக்கொடியின் அழகை அதனில்.

நான்காம் முறையாய் கூவிக்கூவி,
வெந்தேன் என்றது துவரம்பருப்பு.
சேர்த்தே இட்டதில் முருங்கைக்காயும்,
செந்தேன் ஆனது மிகவும் சிறப்பு.

அனுபவமிக்க பெண்டிற்கு - அரைத்தால்தான்
அது சாம்பார் பொடி.
அரைத்தறியா பிரம்மச்சாரிக்கு - அரைக்காசில்
அது கிடைக்கும் உடனடி.

எருமைப் புளியில் கையள வெடுத்து,
அருமைத் துவரை அனைத்தையும் கலந்து,
முருங்கை துண்டுகள் முழுதாய் சேர்த்து,
இருகுவளைத் தண்ணீரை கொடுத்தேன் கொதிக்க.

இறுதியாய் சிறிது பெருங்காயம் சேர்க்க,
உறுதியாய் ருசி பார்த்து உப்பைக் கூட்ட,
தென்றலாய் அறையெங்கும் சாம்பார் வாசம்,
நுகர்கையில் தெரிந்ததென் அன்னை நேசம்.

ஓரைந்து நிமிடங்கள் மூடி வைத்து,
அருகிலே சட்டியில் அரிசி சமைத்து,
அப்பளத்தோடு தான் உண்பதெப்படி!! - நாங்கள்
முதன்முதலாய் சாம்பார் சமைத்ததிப்படி!!!.



No comments:

Post a Comment