Saturday 22 March 2014

ஓர் உழவனின் இறுதி விதை




உங்களுக்கு தெரியாதுங்க,

பொட்டுத் தாலி அடகு வச்சு,
எட்டு வட்டி கடன வாங்கி,
விதை தூவி வெளஞ்சதில்ல- எங்க
சதை தூவி வெளஞ்ச துங்க.

மாடு பூட்டி ஏரு ஓட்டி,
காடு நிறய கழனி வெட்ட,
மானம் பேஞ்சு வருசமாச்சு - உழுத
மாடும் கூட விலைக்கு போச்சு.

பள்ளிப் பணத்த புடிச்சு வச்சு,
பம்பு செட்டு மோட்டார் வாங்கி,
வரப்பு வச்சு வெளஞ்சதில்ல - பையன்
படிப்பு வித்து வெளஞ்ச துங்க.

கரைச்சு வச்ச கேப்பைக்கூழு,
கனவுல மட்டும் நெல்லுச்சோறு,
கண்ணீரால பாசனம் செஞ்சோம் - காஞ்ச
வயிரத் தாங்க உரமா போட்டோம்.

கம்மாய் கட்டி கனவ தேக்கி,
வேர்வ தண்ணி ஆறா ஊத்தி,
வரப்பு மறைய, வெளஞ்சது பயிரு,
அறுப்பு முடிய, வளைஞ்சது உயிரு.

ஆசயோட அனுப்புனோங்க ஆலைக்கு - கதிரு
காசா மாறி வருமுன்னு நாளைக்கு.
கூசாம குறைச்சி கொடுக்குறாங்க - விலைய
பேசாம வாங்கிப் போங்குறாங்க.

வம்பாடுபட்டு இது விளைஞ்ச மகசூலு, 
வட்டிபோக மிஞ்சுனது ஒரே ஒரு தாளு,
பச்சபுள்ள பசிக்குகூட இல்லீங்க பாலு - உழச்ச
பாவத்துக்கு பரிசாங்க இந்த பாலிடாலு?

ஊரு திங்க உழைக்கிறோங்க நாங்க - ஆனா
நாங்க திங்க சோறு இல்லையேங்க,
எங்க ஓலம் கேட்டா ஒதுங்கி ஓடுறீங்க,
ஓசி டிவிக்குத்தான் ஓட்டு போடுறீங்க.

ஏரு ஓடி விளைஞ்ச காடு எல்லாம் - இப்ப
காரு ஒட ரோடா மாறுதுங்க.
வேரோட விவசாயி அழிஞ்சா - குழம்பா
தாரையா ஊத்தி தின்னுவீங்க?

மழை தந்த மரத்தையெல்லாம் வெட்டி - மனையா
மாத்தீட்டீங்க முள்ளுவேலி கட்டி - பச்சை
வனத்தையெல்லாம் ப்ளாட்டுகளா மாத்தி - அதுல
வளக்குறீங்க போன்சாயி தொட்டி.

உழவனால உயர்ந்தது இந்த நாடு - உசுரு
உளுத்து போயி கிடக்குதெங்க கூடு.
நட்ட நெல்லுக்கு அலையுதெங்க பாடு
பட்ட மரமாத்தான் போனதெங்க வீடு.

ரத்தத்தை வேர்வையாக்கி விளைஞ்சதெல்லாம் வறுமை,
செத்த பிணத்துக்கும் நடக்காதிந்த கொடுமை.
இன்றோடு மாறவேணும் கேடுகெட்ட நிலைமை- அதற்கு
உழவனுக்கு வேணும் விலைசொல்லும் உரிமை.

Wednesday 19 March 2014

"சனநாயகக் கைகளே!!!"



நிற்காமல் செல்லும் 
பேருந்தைப் பார்த்து,
கெட்ட வார்த்தை சொல்லி
நீளும் கைகள்,

பத்துமாத கர்ப்பிணியையும்
பரதநாட்டியம் ஆடவைக்கும்,
பல்லாங்குழி சாலை கண்டு
தலையிலடித்து
நோகும் கைகள்,

மங்கல்யானுக்கு முன்பே
செவ்வாய் தொட்ட,
விலைவாசியின் 
உயரம் எண்ண,
விரல் போதாமல்
வாடும் கைகள்,

அனுதினமும் செய்திகளில்
அனுமர் வாலாய் நீளும் -
ஊழல் கதைகள் உண்டு
உறங்க மறுக்கும் தலைக்கு,
அமிர்தாஞ்சனம்
தடவும் கைகள்,

சிறுதொழிலின் வயிற்றலடித்து,
சீமைக்கம்பெனிகளுக்கு 
முந்தி விரிக்கும்,
அக்னி நட்சத்திர நண்பகலையும்
அரையிருட்டாய் மாற்றிவைக்கும்-
மின்வெட்டை தோற்கடிக்க,
மெழுகுவர்த்தி
தேடும் கைகள்,

ஊரெங்கும் லஞ்சமென்று,
ஒப்பாரி வைத்து,
ஓலமிட்டு,
தனக்கென்று வந்தால் மட்டும், 
தலையைச் சொறியும்,
அத்தனை கைகளும்,

வாக்குப்பதிவு நாளன்று,
வரிசையிலேதான் நின்று,
ஓட்டை அமுக்காமல் - வீட்டு டிவி
ரிமோட்டை அமுக்குவதும்
ஏனோ?..

Monday 17 March 2014

தென்காசிக்காரப்பய!!!...



மருதையில, காலேசுல நான் படிச்சிட்டு இருக்கையில, என் பங்காளி ஒருத்தன் இருந்தியான், தென்காசிகாரப்பய.. கருவண்டு கலருல, பாக்க பழமாட்டாம் இருப்பியான், ஆனா சரியான கோட்டிக்காரன். அவன் செஞ்ச அலப்பறை ஒன்னதான் இப்ப சொல்லப்போறேன், நல்லா சுவாரஸ்யமா இருக்கும். ஆறாவது செமஸ்டரோ, ஏழாவதோ சரியா தெரில.. அதிசயமா நான் அன்னிக்கு வகுப்புக்கு போயிருந்தேன்.

எங்க ஹெச்சோடி வகுப்பு. கட்டடத்துக்கு கம்பி எவ்ளோ போடறது, எப்படி போடனுங்கறத கணக்கு பண்ற பாடம். எங்க ஹெச்சோடி இருக்காரே, எப்ப பாத்தாலும் உர்ருன்னே இருப்பாப்ல, பாவம் , சர்க்கர வியாதிக்காரரு.. ஒரு நாளைக்கு அம்பது தடவ , ஒண்ணுக்கு போயிட்டு வருவாரு, சில சமயம் , எங்களுக்கு எது ஹெச்சோடி ஆபீஸுன்னே குழம்பிரும். ஆனா , நல்ல மனுசன்.. நாங்க என்னதான் கிறுக்குத்தனம் பண்ணாலும் கண்டுக்கிட மாட்டாரு. பாசக்கார புள்ள.

அட, பாருங்க , சொல்ல வந்தத சொல்லாம, சுத்தி வளச்சிட்டு இருக்கேன்.  அன்னிக்கு நம்ம ஹெச்சோடி, இன்னிக்கு எப்படியும் பத்து கழுத்தையாவது அறுத்துப்புடனும்னு குறியா பாடம் நடத்திட்டு இருந்தாப்ல. போர்டுல புரியாத பாசையில, என்னென்னமோ குறி போட்டு, அஞ்சும் நாலும் எப்படி பத்தாகும்னு கருத்தா சொல்லி குடுத்திட்டு இருந்தாரு. நம்மாளு, அதாங்க , தென்காசிப்பய.. முத பெஞ்சில உக்காந்துகிட்டு,முழு வீச்சா குறிப்பெடுத்துகிட்டு இருந்தான்.

ஆமாங்க, அவரு எப்பவுமே முத பெஞ்சுல தான் உக்காருவாரு.. பெரிய படிப்பாளி, அறிவாளின்னு கோக்கு மாக்கா எதுவும் நெனச்சிகிடாதீங்க. ஆளு கட்ட, அம்புட்டுதேன். இந்த சினிமா நடிக சினேகா படம் போட்ட நோட்டு ஒண்ணு வச்சிருப்பான். இந்த ஒத்த ரோசாவ வச்சிகிட்டு, தாவணியில, ஓரக்கண்ணால, ஒருக்களிச்சிட்டு பாத்துட்டு இருக்குமே, அதே படம்தான். எழவு , எல்லா பாடத்துக்கும் அந்த ஒரு நோட்டுதேன், நாலு வருசமும் அதே படந்தேன். நாதாரி, வகுப்புக்கு மட்டம் போட்டாலும் போடுவானே, ஒழிய, வேற படம் போட்ட நோட்டுல குறிப்பெடுக்க மாட்டான்.

பயபுள்ள பன்னென்டாப்பு வரைக்கும் தமிழ்ல தான் படிச்சிருக்கான். இங்க வந்து இங்கிலீசுல, தலகாணி சைசுல புஸ்தகங்களை பாத்தவுடனே , மாப்ளைக்கு நாக்கு தள்ளிருச்சி. இருந்தாலும் வுடமாட்டான், மல்லுகட்டி படிப்பான். படிப்பானா, சும்மா உக்காந்துருப்பானான்னு தெரியாது, ஆனா எந்நேரமும் , புக்கும் கையுமா தான் இருப்பான். வா மாப்ள, நான் சொல்லித்தரேன்னாலும் கேக்கமாட்டான். நானா படிச்சாதேன் மனசுல நிக்கும்பான். ரொம்ப கஷ்டப்பட்டு , வயக்காட்டு வேல பாத்து படிச்சு, மெரிட்ல கவர்ன்மெண்ட் காலேசுல சீட்டு வாங்கினவன்.

அட, திரும்பவும் பாருங்க, சுத்த ஆரம்பிச்சிட்டேன். பழைய நினைப்புல, அதான் , அப்பிடியே புடிச்சி இழுத்துட்டு போயிடுது.
கதைக்கு வருவோம். இந்நேரத்துல , எங்க ஹெச்சோடி, போர்டு முழுக்க நிறைச்சிட்டாரு.. ஒரே கோடும் , எழுத்துமா இருக்கு, ஒரு மண்ணும் புரியல. நான் பேனாவை தூக்கி போட்டுட்டு, சன்னல் வழியா, குரங்குகளை வேடிக்கை பாக்க ஆரம்பிச்சிட்டேன். பக்கத்துல இன்னொரு பங்காளி , கண்ணாலயே கூடப்படிக்கிற புள்ள கூட காதல் வளக்க ஆரம்பிச்சிருந்தான். ஆனா நம்மாளு விடலயே. சினேகாவுக்கே வலிக்கிற மாதிரி பக்கம் பக்கமா குறிப்பெடுத்துகிட்டு இருந்தான்.

எங்க ஹெச்சோடிக்கு ஒரே ஆச்சரியம். என்னடா , சாதரண நாள்லயே தூங்கிறுவான், இன்னைக்கி என்னடான்னா.. இப்படி எழுதுறானேன்னு. அப்புடியே அவன் பக்கத்தால் போயி நின்னாரு. நம்மாளு அத கவனிக்கல, பரீச்சையிலை கூட அப்படி காப்பி அடிச்சுருக்க மாட்டான், பக்கம் பறந்துட்டே இருந்தது. ஹெச்சோடி அவன் தோள்ல தொட்டு, "தம்பி, இன்னும் எத்தன பேப்பர் இருக்குப்பா"ன்னாரு. அவன் அவர நிமிந்து பாத்துட்டு , கட கடன்னு, சினேகா நோட்டுல இருந்த காலி பக்கத்த எண்ணி , " இன்னும் நிறைய இருக்கு சார்"ன்னான்.

என்ன ஆச்சி, ஏது ஆச்சின்னு தெரியல, எங்களுக்கு எதுவுமே புரியல. ஹெச்சோடி, வயித்த புடிச்சிகிட்டு , வகுப்பே அதிருர  மாதிரி சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு. எங்களுக்கு சிரிக்கிறதா, இல்ல சும்மா இருக்குறதான்னு தெரியல. இவரு இப்படி சிரிச்சி, இவரு பொண்டாட்டியே பாத்துருப்பாங்களன்னு தெரியல.. அப்புறம் தான் , அவரு கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிட்டு…"தம்பி, நான் பேப்பர்னு சொன்னது , அரியர்ஸைப்பா, நோட்டுல இருக்குற பேப்பரில்ல"ன்னாரு. அப்பதான் எங்களுக்கு விளங்கிச்சு.. அப்புறமென்ன, நாங்க சிரிச்ச சிரிப்புல திருப்பரங்குன்றத்து குரங்குகளே பயந்திருக்கும் போங்க. 

Sunday 16 March 2014

தென்காசிக்காரப்பயலும் கன்னி ஆவியும்



நீங்க எத்தன பேரு திருப்பரங்குன்றம் மலைய பாத்து இருக்கீங்க.. தூரத்திலேந்து பாக்கையில திண்டுக்கல்லு , குண்டுக்கல்லாட்டம், ஒத்தக்கல் மலை மாதிரி இருக்கும். மொட்ட மலை. அவிச்ச முட்டைய பாதியா வெட்டி , கவுத்து வச்சா எப்புடி இருக்கும், அது மாதிரி ஒரு சேப்பு. கீழ முருகன் கோயிலு.. மேல ஒரு மசூதி, மொத்தமா ஒரு சமத்துவ மலை. பல பேரு அந்த மலைய பாத்துட்டு அசந்து போயி, பக்கத்துல ஒரு குட்டி மலை ஒண்னு இருக்கும், அத பாக்க மாட்டாங்க. அத மலைன்னுஞ் சொல்ல முடியாது, பெரிய மேடுன்னுஞ் சொல்ல முடியாது, நடுவால ஏதோ ஒண்ணு. அந்த மேட்டு அடிவாரத்துலதேன் எங்க காலேசு. நான் எங்க காலேசுக்குள்ள அதிகமா போனதில்லங்கிறதால, அந்த மேட்டைப் பத்தியே சொல்லுதேன். ஏன்னா, அங்க தான் இந்தக் கதை ஆரம்பிக்குது. 
………………………………………….

மாப்ள, வேணாம் மாப்ள, சொன்னாக் கேளு , போயிடுவோம்.

யேலேய் , இரப்பா, இன்னும் கொஞ்ச நேரந்தேன் , உண்மையா, பொய்யாண்ட்டு பாத்துபுட்டு போயிடுவோம்.

டேய் , அரக்கிறுக்கா, ஊர்க்காரய்ங்க எதாச்சும் சொல்றாய்ங்கன்னுட்டு, ராத்திரி நேரத்துல, இங்க வந்துகிட்டு. பாம்பு , பூரான் எதாவது கடிச்சிரப்போவுதுடா.

மாப்ள, அம்புட்டு வெவரமில்லாயா நான் வருவேன், காளியண்ணன் கடையில விசாரிச்சிட்டு தாண்டா வர்றேன். பொறுடா, இன்னம் கொஞ்ச நேரந்தேன்.

போடா இவனே, நா கெளம்புரேன், அப்புறம் வீட்டுக்கு பஸ்ஸு கிடைக்காது.
.
.
.
டேய்ய், டேய் "ஒபுசு",  நில்லுடா!, அது வந்துருச்சிடா!!, திரும்புடா!!!.

-----------------------------------------

அந்த மேட்டப் பத்தி அப்புறம் சொல்றேன், இப்ப இந்த "ஒபுசு"ங்கிறவனைப் பத்தி சொல்லியாகனும். ஆளு மதுரக்காரன், அப்பா பேங்க் மேனேசரு, சிம்பு ரசிகன். அவனுக்கு எப்படி "ஒபுசு"ன்னு பேரு வந்ததுன்னு யாருக்கும் தெரியாது, எழவு , அதுக்கு என்ன அர்த்தம்னும் தெரியாது. ஆனா எப்படியோ அது ஒட்டிகிச்சி. ஆளு ஒரு மாதிரி வித்தியாசமானவன். நாமெல்லாம் ஒரு வேலைய நெனச்சி பயந்தோம்னா, என்ன பண்ணுவோம்?, முடிஞ்ச வரைக்கும் அத செய்யமாட்டோம். ஆனா , இவன் அப்படியில்ல, இத செஞ்சா என்ன ஆகுமோன்னு பயந்துகிட்டே , அத செஞ்சிருவான். வீட்டுக்கு தாமசமா போனா அப்பா வைவாரு, வைவாருன்னு கழிஞ்சிகிட்டே, திருநகர்ல முத ஆட்டம் படத்துக்கு போக டிக்கட் வாங்கிட்டு வந்துருவான். அவன் இந்த மாதிரி ஒரு மேட்டர, பக்கத்து லேடிஸ் காலேசுல பண்ணி , நாங்க அஞ்சி நாள் சஸ்பெண்டு ஆன கதயெல்லாம் இருக்கு. சரியான கூறு கெட்டவன். அவன் பாட்டுக்கு வீட்டுக்கு போறவன போயி நம்மாளு பேயி வந்துருச்சினு சீண்டி விட்டா என்ன ஆகும்?….

-----------------------------------------------

மாப்ள, என்னடா சொல்ற?, வந்துருச்சா?, வேணாண்டா!, எங்கடா பாத்த?, பயமா இருக்குடா!,  அது எப்படி இருந்துச்சி?

மேல அந்த ஒத்த மரத்துக்கு பின்னாடி தாண்டா பாத்தேன், வெள்ள சேல மாப்ள!, ரோசாவேதான்!!.

டேய், அளக்காதடா, அந்த ரோசா செத்து முப்பது வருசமாச்சி, நீ என்னமோ நேத்து பாத்த மாதிரி அவளேதாங்குற.

நம்பலல்ல நீயி, வா மேல போவோம். போயி அதுகிட்டயே கேப்போம். 

டேய்!!, நீ என்னடா, எதோ போன் பேசுற மாதிரி பேயிகிட்ட பேசுவோங்கிற.. சொல்றதக் கேளு , பசிக்குது, போயிருவோம்.

வேணான், வேணான்னு சொல்லி, நீதான் முன்னுக்க பொயிட்டுருக்க.. …. இரு .. நில்லு.. என்னடா பாட்டு சத்தம் கேக்குது.. 

டேய்ய்ய்!!!!!… அந்த ஆட்டக்காரி ரோசா ஆட ஆரம்பிச்சிட்டாடாஆஆ!!!!.. 

------------------------------------------

இந்த திருப்பரங்குன்றத்துக்காரய்ங்க இருக்காய்ங்களே, சரியான சாரிசோக்கருங்க… மார்கழி, கார்த்திகை, அய்யப்ப சீஸன் , எது வந்தாலும், பயபுள்ளக சாமி கும்பிடுறாய்ங்களோ இல்லியோ, நெதம் ராத்திரி, பாட்டு கச்சேரி, டப்பா டான்ஸூன்னு , கூத்து கட்ட ஆரம்பிச்சுருவாய்ங்க. நான் படிக்கிறப்பயே இப்படின்னா, முப்பது வருசத்துக்கு முன்னாடி சொல்லவே வேணாம். அப்படி ஒருக்கா, ஆட வந்தவ தானாம்  இந்த ரோசாங்கிறவ… அப்பல்லாம் அவுக பேரு , பெத்தப் பேராம். ஆட வந்தவள சும்ம விடாம, மேல் சாதிக்கார பய ஒருத்தன் விரும்பித் தொலச்சிபுட்டானாம். நாளுங்கெழமயுமா வளந்த இவங்க லவ்ஸு, ஒரு நா ஊருக்கு தெரிஞ்சிரிச்சாம்.. அப்புறம் என்ன, மறு நா,  இவ , மேட்டு மரத்துல தொங்குறாளாம்.. அவன் ஊர்க்கிணத்துல மிதக்குறானாம். அப்புறம் என்ன, கன்னிப்பொண்ணு அநியாயமா செத்துப்போனதால, ஆவியா அலயுறா, சின்னப் பசங்கள புடிக்கிறான்னு கத முப்பது வருசமா ஒடிக்கிட்டு இருக்கு. இவிங்களும் அத நம்பி அன்னிக்கு மேட்டுக்கு போயிட்டு, பேயடிச்சா மாதிரி ரூமுக்கு திரும்பி வந்தாய்ங்க.. எனக்கு ஒன்னும் புரியல, அப்பதான் நான் கேட்டேன்..,

---------------------------------------------------

அப்புறம் என்னடா ஆச்சி?

ஒரே கிலியா போயிடிச்சிறா எனக்கு!.. 
துளிக்காத்து கூட அடிக்கல, 
லேசா யாரோ முனகுறா மாதிரி பாட்டுச்சத்தம், 
எனக்கு, செத்துப்போன என் பாட்டி ஞாபகமெல்லாம் வந்துரிச்சி!!.

இந்த லூசு என்னடான்னா, அம்புட்டு நேரம் , 
வீட்டுக்கு போவனும் சொல்லிட்டு இருந்தான், 
இப்ப அவன் பாட்டுக்கு மேல ஏறிப்போயிட்டுருக்கான்!. 
எனக்கு திக்கு திக்குனு இருக்கு!!.

மாப்ள, கும்மிருட்டுறா!, 
அந்த ஒத்த மரத்த பாத்துருக்கல்ல நீயீ!… 
ஒரு எல கூட ஆடலடா!!!.. 
என்னால அதுக்கு மேல ஏற முடியலடா!, 
புதறு, கல்லு கில்லுல்லாம் கால தடுக்குது!.. 
விலக்கி வுட்டுட்டு , நிமி...ந்து பாத்….தா!!!, 

இந்த நாதாரிய காணமுடா!!!!.. 
எனக்கு வெளிக்கே வந்திருச்சிடா!!!….
அய்யய்யோ, வீட்டுக்கு ஒத்த பயல, 
கூட்டு வந்து தொலைச்சிபுட்டோமேன்னு 
வவுத்தை கலக்கிரிச்சி!!!.

பாட்டுச்சத்தம் நிக்கவே இல்ல!… 
வார்த்தை எதுவும் இல்ல!, 
ம்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ன்னு  முனகுற சத்தம் மட்டுந்தான்.
எனக்கு ரோசா முனகுறாளா?, 
இல்ல இந்த ஒபுசு முனகுறானான்னே புரியல!!..

இப்ப இவன் இல்லாம வுட்டுட்டும் வரமுடியாது…. 
சரி வேற வழியில்லன்னுட்டு , மே..ல. ஏறப்…பாத்தா!!..
பாட்டு சத்தம் நின்னுருச்சிடா!!!.. 
மரத்தடியில இருந்து… 
புசு புசுன்னு வெள்ளையா,  
புக  வருது மாப்ள!!!..

எனக்கு மேல ஏறவும் பயம், 
"ஒபுசு - எங்கடா இருக்க"ன்னு கூப்புடவும் பயம்,, 
அல்லு கெளம்பிருச்சு மாப்ள. 
ஒரு வழியா மரத்துகிட்ட போயிட்டேன் மாப்ள..

புக சாஸ்தியாயிட்டே இருக்கு..
குடல புரட்டுறா மாதிரி ஒரே வீச்சம்,
இரும வர்றா மாதிரி இருக்கு..
வாந்தி வர்றா மாதிரி இருக்கு..
ஆனா பயத்துல எதுவுமே வரல மாப்ள!!

"உஸ்ஸ்.. சும்மா இரு"ன்னு..
ஒரு சவுண்டு மாப்ள.. பாத்தா!!
இந்த விளங்காதவன் , என் காலுக்கு கீழ
படுத்துக்கிட்டு , "வா.. நீயும் வந்து படு"ங்கிற மாதிரி
 சைகை காட்டுறான். 

எனக்கு செம கடுப்பாயிருச்சி..
பரவால்லன்னுட்டு கூட படுத்தேன்..
"மாப்ள ., இங்க பாரு"ன்னுட்டு.. ஒரு பெரிய கல்ல எடுத்து
மரத்தடியில வீசிட்டாண்டா!!!

"டேய்ய் .. எந்த ……………….ண்டா கல்லடிக்கிறது" ன்னு
பெருசா ஒரு பொம்பள வாய்ஸூடா!!!!!..
எனக்கு பேச்சே போயிடுச்சி..
நாத்தம் வேற தாங்கல..
"ஆம்பளயின்னா முன்னாடி வாங்கடா" 
திரும்பவும் சத்தம்…. 
மாப்ள .. போயிரலாம்டான்னு சொல்றதுக்குள்ள
இந்த கிறுக்குப் பய .. எந்திருச்சி..
மரத்த தொடுற அளவுக்கு போயிட்டான்!!!..

நாம இன்னிக்கி பாடிதான்னு முடிவாயிருச்சி..
கடசியா ஒரு பேயப்பாத்துட்டு போயிரலாமேன்னு
முடிவு பண்ணி.. நானும் போனேன்..
மாப்ள.. சொன்னா நம்ப மாட்ட..
அங்க மரத்தோட மரமா சாஞ்சிகிட்டு..
வெள்ள சேலயில.. கண்ணுல்லாம் மேல குத்திகிட்டு..
ஒரு கிழவி.. கையில சுருட்டோட..

"தம்பி.. பொட்டலம் வாங்க வந்தீகளா?
அதுக்கு எதுக்கு கல்ல கொண்டு அடிச்சீங்க..
எத்தன வேணும்?
ஒண்ணு இருவது ரூவாதேன்"னு
போட்டாளே ஒரு போடு…



அடப்பாவிகளா…. கன்னி ஆவியை பாக்க போறேன்னுட்டு போயி.. கஞ்சா கிழவியை பாத்து பயந்துருக்கீங்களேடா..
அந்த ஒபுசு நாயி.. அதுக்குத்தான் என்கிட்ட இருவது ரூவா வாங்கிட்டு ஓடுனானா.. நான்கூட பஸ்ஸுக்குதான்னு நெனச்சேனடா… 

------------------------------------------------------------------
பி.கு: மறுநாள், பக்கத்து வீட்டு பொட்டிக்கட அக்காகிட்ட கேட்டப்ப தான் தெரிஞ்சிது.. இந்தக் காளியண்ணன் , புதுசா காலேசுக்கு எந்த பயலுவ வந்தாலும், இந்த ரோசாக்கதைய சொல்லி தூண்டி விடுறதுன்னு… 
நம்ம ஒபுசு, இப்ப கஞ்சாலாம் அடிக்கிறதில்ல.. சென்னையில ஒரு பெரிய கம்பெனில "மார்க்கெட்டிங் மேனேஜர்".

அந்த கஞ்சா கிழவி , இந்த சம்பவம் நடந்து ஒரு வருசத்தில செத்து போயிடுச்சி.. நம்ம காளியண்ணன் , இப்பல்லாம் இந்த கதயை யார்ட்டயும் சொல்றதில்ல.. ஆனா, ஊருக்குள்ள பல பேரு ராத்திரி நேரத்துல , மேட்டுப்பக்கம், கஞ்சா கிழவிய பாத்ததா பேசிக்கிறாய்ங்க.. கத தொடருது..