Wednesday 30 April 2014

கவிதையும் விமர்சனமும் 2



கவிதை : இரயில் தேநீர்
எழுதியவர் : குமார் பாலகிருஷ்ணன்.


அருணோதய ஆரோகனத்தில்
வைகறைத் தீண்டலில்
வசீகரம் வீங்கி
ஆயிரம் மைல்களை அலாவி
அம்மாஞ்சியாய் வந்து கொண்டிருந்தது
ஓர் இரயில்…

அதில் யவ்வனம் கொஞ்சும்
பொன் நிறச் சிதறல்களோடும்
வெண்பகலில் நண்பகலின்
கதகதப்போடும் வரும்
கரம் கரம் சாயாவை
யாரொருவரும்
தட்டிக் கழிப்பதற்கில்லை….

குளிர்வசதிப் பெட்டியில்
முழந் தாழிட்டு
அல்லாவின் காதுகளில்
குழாவி முடித்திருந்த
குரான் குழந்தையின்
தழுவலைக் கடந்து
பக்கத்திலிருக்கும்
இரண்டாம் நிலைப் பெட்டிக்கு
இளஞ்சூடு பரப்பி
பயணித்த பாதையில்

ஒரு சலுகைப் பயணி
ஒரு சிறப்புப் பயணி

ஓர் அரசியல்வாதி
ஒரு வாக்காளர்

ஒரு வயதானவர்
ஒருவயதானவர்

ஒரு மருத்துவர்
ஒரு நோயாளி

ஒரு தொழிலாளி
ஒரு முன்னாள் தொழிலாளி

ஓர் அதிகாரி
ஓர் உண்மை அதிகாரி

ஒரு படித்தவன்
ஒரு படிக்காதவன்

ஓர் இந்து
ஓர் இந்தியன்

ஓர் ஆண்
ஒரு பெண்
ஒரு திருநங்கை

ஒரு மொழிப்பற்றாளர்
ஒரு மதப்பற்றாளர்
ஒரு தேசப்பற்றாளர்

ஓர் ஆத்திகர்
ஒரு நாத்திகர்

ஒரு போராட்டம்
ஒரு போராளி

ஓர் உண்மை
ஒரு பொய்

ஒரு 1100
ஒரு 5s

ஓர் உளறல்
ஒரு கவிதை

என அனைத்தொருவருக்குள்ளும்
வேறுபாடுகளைக் கடந்து
வெப்பத்தோடு வியாபித்து
அடுத்த சமத்துவ மாநாட்டுக்காய்
சலம்பல்களையும்
குலுங்கள்களையும்
பாத்திரத்துனுள் ஏற்படுத்தியபடி
பக்குவமாய் கீழீறங்குகிறது
இரயில் தேநீர்…..


Monday 28 April 2014

கவிதையும் விமர்சனமும் - 1



ஹாய் Friends!!!,

நான் தொடர்ந்து எழுதிட்டு இருக்கிற "எழுத்து.காம்"ங்கிற வெப்சைட்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட சில நல்ல கவிதைகளுக்கு விமர்சனம் எழுதுற வாய்ப்பு கிடைச்சது. அங்க நான் எழுதுற விமர்சனங்களை, இங்கே உங்களோட share பண்ணிக்கிறேன்.

———————————————————————————

கவிதை : "மணக்கோலம்"
எழுதியவர் : தம்பு

காதோரம்
மெல்லக் கடித்தாள்
எந்தன்
செல்லக் குட்டி....நினைவுகள்
பல சொல்லி.....!!

அவள் அணைப்பில்
அணைந்து போனது
ஆயிரம்
அவஸ்தைகள்....நினைவில்
நின்று கொண்டது
நிம்மதி.....!!

மாலையிட்ட
நிமிஷம்....மறுஜென்மம்
இதுவென்று
மனம்
அமைதி கண்டது....!!

தாலி கட்டி
தாரம்
என்று ஆனதும்.... மனப்
பாரம்
தூரம்
போனதே.....!!

நெற்றி தொட்டு
குங்குமம்
வைத்தேன்.....மனசெங்கும்
பொங்கும்
மகிழ்ச்சிக்கு
அளவேது.....!!

பன்னீரில்
குளித்தோம்.....
பூக்கள் மழை
எனப் பொழிய....
மங்கள இசை
மண்டபம்
நிரப்ப.....
மகிழ்ச்சி வெள்ளத்தில்
நமது உள்ளம்
மணக்கோலம்
கண்டது.....!!


விமர்சனம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்றொரு பழக்கப்பட்ட பழமொழி உண்டு. என்னைக் கேட்டால், திருமணங்கள்தான் சொர்க்கங்களை நிச்சயிக்கின்றன. ஒன்றா? இரண்டா?, திருமணங்கள் ஆயிரம் உறவுநதிகள் சங்கமிக்கும் இன்பக்கடல், லட்சம் பனிப்புன்னகைகளை பரப்பும் குளிர்சூரியன், கோடி நட்பு நிலவுகள் சிந்தும் ஏகாந்தப்பேரொளி.  திருமண நிகழ்வு என்பது இரு கனவுச்சொர்க்கங்கள் இணைந்து எழுப்பும் ஒரு நினைவுக்கோவில்.

பொதுவாகவே திருமணங்களைப் பற்றிய எந்த ஒரு பதிவும் பெண்மையை முன்னிறுத்தியே பதியப்படுகின்றன. அதற்கு காரணமில்லாமலில்லை. ஒரு குடும்பத்தேரினை நிலைகுலைவின்றி, மேடு பள்ளத்தடைகளினினால் தடம்பிறழாமல் காக்கும் அச்சாணியாக இருப்பது பெண்மையே. அப்பெண்மையின் மீது தனது முழு நம்பிக்கையை வைத்து, தேரினது இலக்கை நோக்கி சீறிப்பாயவைக்கும் புரவிகளாக இருப்பது ஆண்மை. அந்த ஆண்மை கூறும் பெண்ணின் பெருமையாக, இக்கவிதை சிறக்கிறது.

“அவள் அணைப்பில்
அணைந்து போனது
ஆயிரம் 
அவஸ்தைகள்…நினைவில்
நின்று கொண்டது 
நிம்மதி”

ஆணென்பவனை முழுமைப்படுத்துவது பெண்மை என்பதை இவ்வரிகளின் மூலம் அழகாக நிலைநிறுத்துகிறார் கவிஞர் தம்பு. ஆண், அவஸ்தைகளின் நாட்டில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவன். அவனுடைய தேடல்களனைத்தும் பெண்மையின் அரவணைப்பெனும் வலி நிவாரணியை நோக்கியே திசைகொள்கிறது. அத்துணை எளிதல்ல, அத்தேடலின் வழித்தடங்கள். ஒரு பெண்மையின் உண்மையான உணர்ச்சிகளெனும் மரவிதைக்கு நீருற்றுபவனுக்கே, அதன் நிழல்சுகம் பாத்தியமாகிறது. அவளுக்குரிய உரிமைகளெனும் தென்றலுக்கு சாளரம் திறப்பவனுக்கே, அதன் அரவணைப்புகள் சாத்தியமாகிறது. இவ்விரு பிறவிக்கடன்களை தீர்ப்பவன் மனதில், அவஸ்தைகள் அணைந்து நிம்மதி ஒளியுறுகிறது.

“மாலையிட்ட
நிமிஷம்.. மறுஜென்மம்
இதுவென்று
மனம் 
அமைதி கண்டது…!!

தாலி கட்டி 
தாரம்
என்று ஆனதும்… மனப்
பாரம் 
தூரம் 
போனதே….!!”

தன் காதலுக்குரியவளிடம், தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக்கொள்ளும் மோட்சநிலையினை கூறும் வரிகளிவை. உறவறிய, உலகறிய நான் இவளுக்குரியவன் என்று மங்கல நாணேற்றி உறுதி கூறும் தருணத்தில், அவனுடைய பாரமிக்க பலவருடப் பொழுதுகள், நொடிகளின் இடைவெளியில் கரைந்து போகின்றன. அவனுடைய பாவங்களின் அந்திமக்காலத்து தீர்ப்பு நாளாக அத்தருணம் மாறி, அவன் மன்னிக்கப்படுகிறான். தன் மனையாளின் முதல் மகனாக மறுபிறப்பெடுத்து, மன அமைதி கொள்கிறான்.

"நெற்றி தொட்டு 
குங்குமம் 
வைத்தேன்.....மனசெங்கும் 
பொங்கும் 
மகிழ்ச்சிக்கு 
அளவேது.....!!" 

நீ எனது உயிராகிவிட்டாய், என் உடலெங்கும் உள்ளோடும் குருதியோடு கலந்துவிட்டாய். நம் குருதிவழி பிரிந்து பிறக்கும் வம்ச விருட்சத்தின் வேராகி விட்டாய். இந்தத் திலகம் அதன் அடையாளமாய், உன் நுதலில் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் என்று இரண்டறக் கலக்கும் மகிழ்ச்சிக்கு அளவீடுகள்தான் உண்டோ. 

இந்த வரிகளோடு அந்த மணவறையில் சொர்க்கம் ஒன்று உருவாகிறது. அது, காண்பவர் கண்வழி இதயத்துள் புகுந்து, பூமாரி பொழிகிறது. பன்னீர்த்துளிகளின் வாசம் மங்கள இசையோடு கலந்து, மண்டபத்தை மட்டுமல்லாது, குழுமியிருக்கும் மனங்களனைத்தையும் நிறைக்கிறது.உலகத்தின் இன்பங்களனைத்தும் சரம் சரமாய் தன்னைத்தானே கோர்த்து, மணமக்களெனும் இரு புள்ளிகளை நிரந்தரமாய் பிணைத்து, அலங்கரிக்கும் ஒரு மணக்கோலக் கவிதையாய் உருக்கொள்கிறது.

ஒரு அழகான திருமணக்காட்சியை, இனிமையான எளிமையான வார்த்தைகள் பூட்டி, எதுகைகளால் அலங்கரித்து, உணர்ச்சிகள் ஊற்றெடுத்து பரவுகின்ற ஒரு பெருநதியில், நம்மை பிரயாணிக்க வைத்த வகையில், இக்கவிதை சிறப்புப் பெறுகிறது. வாழ்த்துக்கள் தம்பு அவர்களே!!.


எழு!!!



"எழு!!!"


வீழ்ச்சி

இலக்கென நான் நிர்ணயம் செய்த,
அறைக் கதவினுற்கான
ஓட்டப்பந்தயங்களின்
ஒவ்வொரு அடியிலும், 
அந்தகாரத் தடங்களின்,
அகலங்கள் நீள்கிறது.

நொடிகள் நாட்களாய்,
நாட்கள் நாழிகையாய்,
நாழிகைகள் யுகங்களாய்,
காலம் குழம்பிய பெருவெளியாய்
என் வாழ்விடம் மாறுகிறது.

சுவர்களின் வெளிப்பக்கம்
சிரித்துக் கொண்டேயிருக்கும்
வாய்களுக்கான கண்கள்
உள்பக்கம் ஊடுருவ - என் பார்வை
நிலை குத்துகிறது.

சூனியத்தின் சில்மிஷத்தால்,
மனநிலைகள் உறைந்து
மூளைத்திசுக்களில் தீப்பற்றி
நாடி நாளம் நரம்புகளில்
சூடேற்றி பரவ,
நாற்காலிகள் உடைகிறது.

தனிமை உடைக்கும் 
திறவுகோல்கள் - அதன் 
தாழ்வாரங்களில் உள்ளதென
திரித்துக்கூறும் பொய்மனம்,
தரைநோக்கி,
தலைகீழாய் பயணிக்கிறது. 

மேசைகளின் பேச்சில் மயங்கி,
அலமாரிகள் அலங்காரம் செய்ய,
நிலைக்கண்ணாடிகளின் 
எக்காளச் சிரிப்பொலியாய் -
உயிரற்றவைகள் உயிர் பெற,
உயிருள்ளவன் உயிர்
உச்சகட்டத் தனிமையிலிருக்கிறது.

எழுச்சி

இதற்குமேல் இறக்கமில்லை,
இறப்பதால் பயனுமில்லை.
எந்தக் கதவுமே
ஒரு வழிப் பாதையில்லை.
ஏணிகளின் பயன்பாடு
இறங்குவதற் கென்றில்லை.

எண்ணங்களால் 
தீக்குளித்தால்
எத்திக்கும் இருளில்லை.
சிந்தையினால் 
அளக்கப்படின்,
அந்தகாரம் அகலமில்லை.

சூழ்நிலைகளின் 
சிறை உடைத்தால்,
சூனியமென்று எதுவுமில்லை.
தோல்வி தோண்டி 
வெற்றி எடுத்தால்-
ஊரார் வாய் சிரிப்பதில்லை.

திறமைகளை 
மீட்டெடுத்தேன்,
திறவுகோல் அகப்பட்டது.
தனிமையெனும் 
விலங்கறுத்தேன்,
தடங்கள் புலப்பட்டது.

கோபத்தீயை
உரமாக்கினேன்,
புலன்கள் உயிர்பெற்றது.
அன்பொன்றே
இலக்கென்றேன்,
அறைக்கதவின் தாழ் உடைபட்டது.

வெற்றி

கரவொலிகளுக் கிடையில் - நான்
கதவுடைத்து வெளிவருகையில்
எனக்கெனவே காத்திருந்தாற்போல்
அலர்கிறது ஒரு மலர்.



Monday 14 April 2014

நட்சத்திரமாய் நீ...



அமாவாசைகள் தோற்ற ஓர்
அடர்ந்த ராப்பொழுதொத்த,
இருள் கூடிக்கூச்சலிடும்
இதயத்தின் ஆழ்குகைக்குள் - என்
எழுஜென்ம இன்பம் பிசைந்து
சாறெடுத்து, சாந்தாக்கி
எழுப்பிய நினைவுப்பேழையுள்,
அடைத்து வைக்கிறேன்,
உன் சிரிப்பின் பொழுதுகளை.

அதிர்ந்து சிரித்துவிடாதே!!..
உடைபேழை வழிவழியும்,
சிரிப்புச் சிதறல்களில் சிக்கிநான் 
சிதைந்துவிடக்கூடும்.

கைவிரித்து, காற்றடைத்து,
விரலிடைப்புகும் 
தென்றலைத் தீயாக்கி,
காதோரம் சூடேற்றும்
ஸ்பரிசங்களின் வழி,
யாருமறியா உன்னிதழ் கூறும்,
யாவருமறிந்த ரகசியங்கள்.

ஓவ்வொரு உதட்டசைவிலும்
மரித்து மரிக்கும் மரித்தல்களினூடே,
யுகங்கள் வாழ்ந்து கழிக்கிறேன் - ஒரு
வண்ணத்துப்பூச்சியின் கனவாக.

கோடிப் பறவைகள் - நிழல் 
தேடிக்களைத்து பின்
வாடி வடித்த நீர்
வழியெங்கும் நிறைக்கும்,
வாட்டும் வெயில் பருவத்தில்,
வந்தெதிர் நிற்கிறாய்,
வானவில் சேலையுடுத்தி - உன்

இருவிழிக்குளிர் படும்,
இமைநிழல் பகுதியில்,
இடம் பிடிக்க கடும் போர்,
இடி, மின்னல், மழைகளிடையே.

உன்னுடல் தழுவி,நிலம் வீழும்,
அலைகேசம் கோர்த்து,
வேய்கிறேன் நம் கூரையை.
உலகக்காதலர் அனைவரின்,
சாபமூட்டை சுமந்து - நம்
கூரைக்குள் குடிவர
காத்திருக்கிறது நிலா.

என்னுயிர் குடிலின் இண்டுகளிலும்,
நிறைந்து, வியாபித்து, விரிந்து,
இறந்த இதயவிளக்குத் திரிதூண்டி,
காதலூற்றி, ஒளியேற்றும்,

நட்சத்திரமாய் நீ.