Saturday 28 June 2014

"விருந்துண்ணிகள்"


"விருந்துண்ணிகள்"


யாதொரு வெற்றிப்பிரஸ்தாபமிடும்
அஸ்தமனப்பொழுதிலும்
அஸ்திவாரம் பற்றும் 
இலவச இணைப்புகளாக ஒட்டிக்கொள்கிறது 
எவரென்றேயறியாத விருந்துண்ணிகள்.

அடையாள அட்டை கழுத்தோடு
ஐந்து நட்சத்திரத்திலும்
அன்றாடம் காய்ச்சியோடு
அரசுக்கடையிலும்
பொதுக்குழுவிடும் விருந்துண்ணிகள்
அடுத்த கொழுதொடையை 
நிர்ணயித்தே நிறைக்கின்றன
அன்றைய உறிஞ்சுதல்களை. 

தாகம் தீர்ந்த
விருந்துண்ணிகளின்
விரய பரோபகாரத்தில்
தலைப்பாகட்டித் தெருநாய்களுக்கு
கொண்டாட்டமாம்.
தெருநாய்களின் புஷ்டிகண்டு
தலைப்பாகட்டித் தலைவருக்கும்
கொண்டாட்டமாம்.

பயணிகள் கவனத்திற்கு,
ஒருவழிச்சாலையில் 
இருநூறில் விரைவது
எழுநூறைத்தாண்டிய 
விருந்துண்ணிகளாய் இருக்கக்கூடும்.
எமலோகப்பயணம் செல்வது 
நீங்களாகவும் இருக்கக்கூடும்.

வெண்ணெய்ரொட்டிக் குடில்களிலும்
சிகப்புத் தாத்தா கடைகளிலும்
எப்போதும் வீற்றிருக்கின்ற
மெல்லின விருந்துண்ணிகளின்
ஜனனதினக் கொண்டாட்டங்களில்
மதுரை முனியாண்டி
மரணதினம் அனுஷ்டிக்கிறார்.

பெரியகாந்திக்கு குழம்பி வாங்கும்
விருந்துண்ணிகள் பெரும்பாலும்
சதை தின்ற பசியினால்
சூம்பிய கைகள் கொண்டு
ஒட்டிய வயிறு தடவும்
நடைபாதை பிஞ்சுகளை,
கண்டும் காணாதோர்களே.

பள்ளிப்பழக்கமாகிவிட்ட
விருந்துக்கலாசாரத்தை
நாகரீக மாற்றமென
உண்ணிகள் விடையளிக்க,
ஜகங்கள் தீர்ந்த பாரதி
பிரபஞ்ச மூலைகளை
துழாவிக்கொண்டிருப்பதாய் கேள்வி.

Wednesday 18 June 2014

கவிதையும் விமர்சனமும் 6 - என் கிராமம்



கவிதை : என் கிராமம்
எழுதியவர் : நுஸ்கி

பன மர காடு
தென்னங் கீற்று வீடு
களிமண் தரை
தலை தட்டும் கூரை

முற்றத்தில் தக்காளி
சிவந்த குடை மிளகாய்
கர்ப்பணியான கத்தரி
கனத்துப்போன வெண்டக்காய்

தொலை தூரம்
ஒற்றைவழி பாதை
வெப்பமேற்றும் உச்சி வெயில்
காற்றுக்கு ஆடும் வேப்ப மரம்
அதில் தொங்கும் தேன் வதை

சுத்தமான கற்று
அதில் இணைந்த குயிலின் ஓசை
குருவியின் சத்தம் மூலிகை வாசம்
முற்றம்மெங்கும்
கொடி மல்லிகை படரும்

அத்தி மரம் பூக்கும்
ஆலமரம் காய்க்கும்
ஆத்தோரமாய் நிற்கும்
மா மரம் இனிக்கும்

பச்சை நிறம் வயல் காட்டும்
வெண்ணிறமாய் மாட்டுப்பால் இருக்கும்
செந்நிற மண்ணில் நெல் மணி
செழித்து தூங்கும்

இத்தனையும் இருந்த மண்ணில்
இன்றைக்கு அடுக்கு மாடி
இத்தனையும் காட்டும்
ஒரு சதுரடி தொலைகாட்சி பெட்டி

Saturday 14 June 2014

மதுரைக்காரி!!



மதுரைக்காரி


அண்ணஞ் சொல்லி கேட்டதில்ல,
ஆயிஅப்பந் திட்டி திருந்தவில்ல,
அலப்பரை பண்ணி திரிஞ்சவந்தேன்,
அழும்பு பேசி அலைஞ்சவந்தேன்.

ஒத்தக்கடை ஊர்க்காரி - உன்
ஒசரம் காட்டி வுழுக வச்ச,
ஓரப்பார்வை பாத்து பாத்து
ஒசக்க என்ன பறக்க வச்ச.

பட்டறய போட்டு திரிஞ்ச மனச
ஆட்டய போட்டு அலைய வுட்ட,
எட்ட நின்னு சாட பேசி
கெட்ட கிறுக்கு புடிக்க வுட்ட.

காவாலிப் பய காலு ரெண்டும்
களவாணி உன்வாசப் பக்கம், 
கருக்க வரை அலையுதுடி,
காத்து காத்து நின்டு நின்டு,
கால்ல ஆணி முளைக்குதுடி.

அழக கட்டிக்க ஆச சொன்னேன்
அராத்து பண்ணி அழுக வச்ச,
எதுர வந்தும் நெசம் சொல்லாம
மதுரக்கார மனம் மறுக வச்ச.

வீம்பு போதும் பொட்டப்புள்ள,
வம்புக்காரி, உன் எதயத்துள்ள,
இம்புட்டுகோண்டு இடங் கிடைக்க 
எம்புட்டு காலம் காத்து கெடக்க.

காதல் கசக்குதய்யா!! - கவிதை


காதல் கசக்குதய்யா!!

கன்னி இதழ் குறிக்கும்
சின்னமாக மாறிவிட்ட
வண்ணரோஜாக்களில்
காணப்படுவதில்லை 
நட்ட தோட்டக்காரனின்
ஒட்டிய வயிறு.

கவிதையும் விமர்சனமும் - 5



கவிதை : தெருவோர பிஞ்சுகள்.
எழுதியவர் : கீதமன்.

கருவோடு
வந்த
கால்கள்
திருவோடு
சுமந்து
தெருவோடு
அலைகின்றன

கருவறைக்குள்
கண் விழித்த
நம் நாட்டின்
எதிர்காலம்
தெருவோரம்
துயில்கின்றன

வித்திட்டவர்
வினைப்பயனை
பெற்ற
வீணர்களின்
விதிச் சுமையை
வீணாய்
பிஞ்சு வித்துக்கள்
நோகின்றன

கால் வயிற்று
விருந்துக்கு
அரை கும்பி
கஞ்சிக்கு
வெயிலில்
வெந்து
வேகாமல்
வேகின்றன

சில்லறைகள்
விரல்
எண்ணி
பள்ளிப்
படிப்பின்றி
கணிதம்
இவர் வசமானது

கல்விக்கு மனமின்றி
பள்ளி அனுமதிக்கு
பணமுமின்றி
பள்ளிக்கூடமது
விஷமானது

ஆடை கிழிசல்களின்
அடைக்காத
வெற்றுவெளி மேடைகளில்
அவமானம்
அரங்கேறுது

வாழ்க்கை கோடையிலும்
வழிந்தோடும்
வறுமையின் ஓடையில்
இவர்
மானம் வழிந்தோடுது

"வல்லரசு ஆகி விட்டோம்
வரலாற்றில் இடம் பிடித்தோம் " என
வன்
வாய் அரசு
கூத்தாடுது

கூடடைய
கூடின்றி
விழுந்துதுறங்க
வீடின்றி
மென்
பிஞ்சு
பிறை தேயுது

Monday 26 May 2014

சாம்பார் வைப்பது எப்படி?!?!



சாம்பார் வைப்பது எப்படி?!?!


துவரையா?... கடலையா?…
இந்தப் பருப்பில்தான் எத்தனை வகை?
அவரையா?... முருங்கையா?...
எந்த சேர்ப்பில்தான் கூடுதல் சுவை?

அரை விடுமுறை நாளன்று,
ஆனைவயிறின் அசுரப்பசியில்,
அதிகப்பிரசங்கி நண்பன் கொடுத்த,
அநியாய யோசனைதான். 
சொந்த சமையல் சாம்பார்.

தட்டு கழுவக்கூட - சமையல் 
கட்டு பக்கம் சென்றதில்லை.
வெந்நீர் வைத்துக்கூட - எங்கள்
அடுப்பிற்கு அனுபவமில்லை.

இருந்தாலும் துணிந்து விட்டோம்,
இயலுமென்று இஞ்சியோடு.
போர்க்கோலம் பூண்டு விட்டோம்,
கரண்டி கடாய் கத்திரிக்காயோடு. 

எடுத்தவுடனே சந்தேகம்
எண்ணெய் எவ்வளவென்று?
என் நண்பனுக்கோ பெருங்குழப்பம்,
எந்த எண்ணெய் என்று?

இறைவன் விட்ட வழியென்றேன்-நல்ல வேளை
இருந்தது ஒன்றுதான் வேறில்லை.
எடுத்து ஊற்றி காய்ந்தவுடன்- இட்டேன்
கடுகு உளுந்து வேப்பிலை.

இட்ட கடுகும் வெடித்து தெறித்தது,
எம் வீரத்தமிழ்ப் பெண்ணைப்போல.
தெறித்த சூட்டில் பயந்து போனேன்,
எம் பெண்ணைத் தொட்ட கயவன்போல.

இடையில் வந்தது முனகல் சத்தம் - என்
இனிய நண்பன் அழுகும் சத்தம்.
வெட்டுகிறேன் வெங்காயம் பேர்வழியென்று,
கொட்டுகிறான் கண்ணீரை உப்புக்கென்று.

அழுத்தமானியும் அடித்து அழைத்தது,
கொடுத்த துவரையும் கொஞ்சமே வெந்தது.
திருகி நெருப்பை கூட்டி வைத்து,
திரும்பையில் தோன்றியது, புளியை மறந்தது. 

எலந்தையளவா? எலுமிச்சை அளவா?
எண்ணி மூளை குழம்பினேன்.
எருமை அளவை எடுத்துருட்டி,
நண்பன் கரைக்க, திடுக்கிட்டேன்.

வெள்ளையன் வெங்காயம் பொன்னனாக,
சிவந்த தக்காளி நாணிக் கரைய,
பச்சை மிளகாயை மேலாய்த் தூவி,
பார்த்துரசித்தேன் தேசக்கொடியின் அழகை அதனில்.

நான்காம் முறையாய் கூவிக்கூவி,
வெந்தேன் என்றது துவரம்பருப்பு.
சேர்த்தே இட்டதில் முருங்கைக்காயும்,
செந்தேன் ஆனது மிகவும் சிறப்பு.

அனுபவமிக்க பெண்டிற்கு - அரைத்தால்தான்
அது சாம்பார் பொடி.
அரைத்தறியா பிரம்மச்சாரிக்கு - அரைக்காசில்
அது கிடைக்கும் உடனடி.

எருமைப் புளியில் கையள வெடுத்து,
அருமைத் துவரை அனைத்தையும் கலந்து,
முருங்கை துண்டுகள் முழுதாய் சேர்த்து,
இருகுவளைத் தண்ணீரை கொடுத்தேன் கொதிக்க.

இறுதியாய் சிறிது பெருங்காயம் சேர்க்க,
உறுதியாய் ருசி பார்த்து உப்பைக் கூட்ட,
தென்றலாய் அறையெங்கும் சாம்பார் வாசம்,
நுகர்கையில் தெரிந்ததென் அன்னை நேசம்.

ஓரைந்து நிமிடங்கள் மூடி வைத்து,
அருகிலே சட்டியில் அரிசி சமைத்து,
அப்பளத்தோடு தான் உண்பதெப்படி!! - நாங்கள்
முதன்முதலாய் சாம்பார் சமைத்ததிப்படி!!!.



Sunday 25 May 2014

கவிதையும் விமர்சனமும் - கண்ணீர் தொட்டு கவிதை எழுது



கவிதை : கண்ணீர் தொட்டு கவிதை எழுது
எழுதியவர் : வினோதன்

குருதிக்குடுவை நிறைய 
பெருங்குணம் சுமந்தபடி 
சமூகம் நோக்கினேன், 
தட்டிவிட்டபடி - கையில் 
சாக்குப்பை திணித்து 
பணம் பொறுக்கும்படி 
பரிவின்றி பணிக்கப்பட்டேன் ! 

உயர்கல்வி உடுத்தி 
தெரு கடக்கும்போது 
அழுத்தமாய் சிரித்தது 
அழுக்குச் சமூகம் - நீ 
யாரென்பதை - நின் முகம் 
தவிர்த்து - பண முகாமே 
தீர்மானிக்கும் என்றபடி ! 

என் திறமைகளை 
அளவீடு செய்ய மறுக்கும் 
செவிட்டு உலகம் 
செருப்பை உற்றுநோக்கி 
என்னை கணிக்கிறது ! 

ஏறி-இறங்கிய உடுப்பற்ற 
நான் - ஏற-இறங்கவே 
பார்க்கப் படுகிறேன் - என் 
அழுக்கற்ற அகம் பொசுங்க 
பொய்த்தூய்மை தேடப்படுகிறது ! 

உண்மையை மடித்து 
முதுகுக்குப்பின் ஒழித்து 
போலிப் புன்னையோடு 
காசோடு காதல்புரி - உன் 
நேர்மைக்கு தீயிட்டுவிட்டு ! 

பணக்கார காதல்களுக்கு 
வாயிற்சீட்டும் - ஏழைக் 
காதல்களுக்கு வாய்ப்பூட்டும் 
பட்டுவாடா செய்யப்படுகிறது 
மேலும்சில காரணிகளோடு ! 

எங்கு திரும்பினும் 
முகமதிப்பை மிதித்தபடி 
பணமதிப்பை கேட்கும் 
சமூகம் - எனைத்தள்ளிய 
இடம்தோறும் - எனைப்போன்றே 
பணப் பொறுக்குப் போருக்கு 
பழக்கபடாத முகங்கள் ! 

ஓர் நாள் விடியும் 
என்ற நம்பிக்கையை 
நெஞ்சிலும் - வறுமையை 
முதுகில் சுமந்தபடி 
வானவில் ரசிப்பதெப்படி...? 
நிறைய அழு - கண்ணீர் 
தொட்டு கவிதை எழுது !!!